Sunday 6 October 2013

வாழ்த்து அட்டைகள் - 1

   காலை புலர்ந்து சில மணி நேரங்கள் தான் ஆகியிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, சில்லென்ற நீரில் குளித்து முடித்தாள். தலையில் தனக்கு பிடித்த வான நீல நிறத்து துண்டை கட்டிக் கொண்டு, தனது அறையிலுள்ள அலமாரியைத் துலாவத் தொடங்கினாள்.

  தன்னிடம் உள்ள புடவைகளிலேயே விலையுயர்ந்த புடவை அது. அவளுடைய மேனியின் நிறத்தை, இன்னும் அழகுபடுத்தும், முத்து நிறத்து காஞ்சிபுரத்து பட்டுப் புடவை. அம்மாவிடமும் அப்பாவிடமும் அடம்பிடித்து வாங்கிய பட்டுப் புடவை.

"உனக்கு கல்யாணமா என்ன? இவ்வளவு விலையுயர்ந்த பட்டு புடவைய நான் என்னோட கல்யாணத்துக்கு கூட கட்டிக்கிட்டது இல்ல" என்று அம்மா அந்த பட்டுப் புடவையை வாங்கி கொடுக்கும் போது கேலி செய்திருந்தாள். சில சமயங்களில் தற்செயலாக வேடிக்கையாக சொல்லும் வார்த்தைகள் கூட, வாழ்க்கையில் பலித்துவிடுகின்றன.

 புடவை கட்டுவது ஒரு கலை. அதில் ஜெயஸ்ரீ கைதேர்ந்தவள் தான். ஆனால், மனதில் வேதனை ஒரு பக்கமும் சந்தோஷம் மறுபக்கமும் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததால், அவளும் புடவையுடன் இரண்டு மணி நேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். முழு திருப்தி ஏற்படவில்லை. மனதில் இருக்கும் வலிகள், நம்முடைய அங்கங்களில் பிரதிபலிப்பது, மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்.

அம்மாவும் அப்பாவும் இவளிடம் கொள்ளை ஆசை கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல், அப்பாவுக்கு ஊரில் ஒரு தனி கௌரவம் இருக்கிறது. ஆனால், தான் செய்யும் காதல் திருமணம், இதை எல்லாம் அழித்துவிடும் என்று தெரிந்தும் ஜெயஸ்ரீ அதற்கு துணிந்துவிட்டாள்.

அம்மா அப்பாவைப் பற்றி எண்ணிக் கொண்டே, காதில் தோடுகளையும், கழுத்தில் ஒரே ஒரு தங்க சங்கிலியையும், கையில் கண்ணாடி வளையல்களையும் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், செல்போன் முணங்கியது.

செல்போனை எடுத்து காதில் வைத்தாள். அப்போது தான் ஜன்னலுக்கு வெளியே சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.

"ஹலோ! ரெடி ஆய்ட்டியா ஜெயா?"

தனக்கு உலகிலேயே மிகவும் பிடித்தமான குரல். ஆண்மையுடன் ஸ்டைலையும் கலந்து, ஜெயஸ்ரீயின் பெண்மையை அவளுக்கே உணர வைத்த ரகுவின் குரல்.

"இல்லடா செல்லம். இன்னும் தலை மட்டும் சீவணும்" என்றாள்.

"ஓ.. எவ்ளோ நேரமாகும்?"

"ஒரு அரைமணி நேரம்டா கண்ணா" என்றவளிடம்


"அப்போ கணேஷ் அண்ணாவ கார் எடுத்துட்டு வீட்டுக்கு வர சொல்லிடவா?"

"ஓக்கே!!! ஆனா இவ்ளோ சீக்கிரமே ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு போகணுமா?" என்று கேட்டவளிடம் மறைந்திருந்த சோகம் வெளிப்பட்டது.

" அப்புறம். அவங்க குடுத்த நேரம் முடிஞ்ச பிறகு போவோமா?"

"இல்ல. எல்லாமே வேகமா நடக்குற மாதிரி தோணுது ரகு" என்று ஜெயஸ்ரீ  முணங்கினாள்.

"கவலப்படாத ஜெயா குட்டி. எல்லாம் சரியா போய்ரும். நான் அண்ணாவ கார் எடுத்துட்டு வர சொல்றேன். ஒரு எட்டு மணி போல அண்ணா வந்துருவார். அதுக்குள்ள ரெடி ஆய்ருமா" என்றான்.

"சரிங்க காதலரே. இப்ப என்ன ரெடி ஆக  விடுங்க" என்று ஜெயஸ்ரீ போனைத் துண்டித்தாள்.

ரகுவை அவளுக்கு பிடித்ததற்கு காரணம் என்னவென்று இது வரை அவளுக்கு புரிந்ததில்லை. அவன் அவ்வளவு அழகு என்றும் கூற முடியாது. படித்தவனும் கிடையாது. அன்பாக பேசி மயக்கியவனும் கிடையாது. சொல்லப் போனால், அனைவரையும் விட ஜெயஸ்ரீயை மிகவும் காயப்படுத்தியவன், ரகு. காதலுக்கு கண் இல்லை என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், காதலுக்கு கண், வாய், மூக்கு, காது என்று எதுவுமே இல்லை என்று ஜெயஸ்ரீயின் காதல் நிரூபித்தது.


கடைசியாக ஒரு முறை கன்னிப் பெண்ணாக கண்ணாடி முன்பு நின்று, தன்னை முழுவதுமாக ரசித்துக் கொண்டாள். பெற்றோரும் உடனிருந்தால், ஒரு களை வந்திருக்குமே, அதை புன்னகையின் மூலம் வர வைக்க முயற்சித்தாள். பின் தன்னுடைய ஹேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினாள்.

ஜெயஸ்ரீ, நன்றாக படித்த பெண். இப்போது, பெங்களூருவில் வேலை செய்கிறாள். அழகான மெல்லிய தோற்றம். சுண்டினால் இரத்தம் வரும் அளவுக்கு, எலுமிச்சை நிறத்தை ஒத்த நிறம். ஆறடி கூந்தலை வைத்து, ஐடி கம்பெனியில் சமாளிக்க முடியாத சூழ்நிலை வந்த பட்சத்தில், தன்னுடைய கூந்தலை தேவைக்கேற்ப வெட்டிக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய அழகு இன்னும் குறைந்ததாக இல்லை.

அவளுடைய கண்களில், நட்சத்திரங்கள் குடி கொண்டு அவை மினுமினுக்கின்றனவோ என்று பார்ப்பவருக்கு சந்தேகம் ஏற்படும். மற்றவரை சுண்டி இழுக்கும் அந்த கண்களுக்கு மேலே, மன்மதனின் வில் போன்ற புருவங்கள், எந்த ஆடவனையும் அவளிடம் மயங்க செய்யும். ஐடி கம்பெனியில் பணி புரிவதால், பார்ட்டி என்று பெங்களூருவில் சுற்றுவது உண்டு. ஜீன்ஸும் சிக்கென்று டி-சர்ட்டும் போட்டு திரிந்த ஜெயஸ்ரீயா இவ்வாறு பட்டுப்புடவையில் வருகிறாள் என்று ஐடி கம்பெனியில் ஜெயஸ்ரீயைப் பார்த்தவர்களுக்கு சந்தேகம் வரலாம்.

இன்று, தன்னுடைய கடந்த காலத்தை எல்லாம் விட்டுவிட்டு, ஒரு குடும்ப பெண்ணாக மாறும் ஜெயஸ்ரீக்கு வாழ்க்கையின் நிஜங்களை சந்திக்கும் சக்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும், உதட்டில் புன்னகையுடன் கதவை சாத்திவிட்டு, கீழே நின்று கொண்டிருந்த காரை நோக்கி, அன்ன நடை போட்டாள்.

"என்ன அண்ணா? எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக் கொண்டே கார் கதவை ஜெயஸ்ரீ திறந்தாள். இதுவரை, சீராக ஓடி கொண்டிருந்த கடிகாரம் போல அடித்துக் கொண்டிருந்த இதயம், கார் கதவை திறந்ததும், ரேஸ் குதிரையைப் போல ஓடத் துவங்கியது. காரில் ஏறியவளுக்கு, காருக்குள் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது தெரியவந்தது. 

7 comments:

  1. nice de... continue to post it soon

    ReplyDelete
  2. nice one..continue the good work da...Priya...:)

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழகிய துவக்கம். ரொம்ப நல்லா இருக்கு..................keep the good work. God bless you.......

    ReplyDelete
  5. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete