Tuesday 30 April 2013

முரண்


இன்றும் சாப்பிட வெகு நேரமாகிவிட்டது. இரவு ஒன்பது மணி. மற்ற குடும்பங்களில் இது இரவு சாப்பாட்டிற்கு சரியான நேரமே என்றாலும், மாலாவின் வீட்டில் இது வெகு நேரம். அதுவும் மாலாவின் அப்பாவுக்கு இரவு சாப்பாட்டிற்கு ரொம்ப ரொம்ப தாமதம் என்றே சொல்ல வேண்டும். அவரைப் பொருத்தவரை இரவு சீக்கிரம் சாப்பிட்டு காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கும் பழக்கமே சீரான ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும். எனவே இரவு எட்டு மணிக்குள் மாலாவின் அப்பா சாப்பிட்டு, பத்து மணிக்குள் தூங்கியும் விடுவார். ஆனால் மாலாவிற்கு இது ஏனோ பிடிக்கவில்லை. அவளைப் பொருத்தவரை மனிதர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்; ஒரு இயந்திரத்தைப் போல இருக்க கூடாது.
    
             மாலாவுக்கும் அவளுடைய இயந்திர அப்பாவுக்கும் பத்து பொறுத்தம். அப்பாவுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கூட, அவருடைய பிள்ளை தானா இவள் என்று பார்ப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்ப்படும் அளவிற்கு இருவருக்கும் பொறுத்தம்.

அப்பா எந்த புத்தகத்தை வாங்கினாலும் அழகாக சிறிது முனை கூட மடங்காமல் பாதுகாப்பார். மாலாவோ புத்தகம் படிப்பதற்கு தான், ஷோ கேசில் வைப்பதற்கு அல்ல என்று எண்ணுவாள். அது மட்டுமில்லாமல், சில சமயங்களில் படித்ததற்கு அடையாளமாக புத்தகத்தைக் கிழித்தே விடுவாள்.  அவர் ஊருக்குப் பயப்படுவார். ஆனால் இவளோ யாரைக் கண்டும் பயப்படமாட்டாள். மாலாவைப் பொருத்தவரை எல்லாருமே ஒரு உயிரினம் தான். இந்த உலகத்தில் அவரவர் மனத்திற்கு மட்டும் பயந்தால் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை.

மாலாவின் அப்பா வீட்டில் வந்தாலே சிடு சிடு என்று மூஞ்சை வைத்துக் கொள்வார். பல நாள்களில் அப்பா வீட்டுக்கு வெளியில் சிரிப்பதும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் கோபமாக வார்த்தைகளைக் கொட்டுவதும், மாலாவுக்கு மட்டுமல்ல அவளது குடும்பத்திலுள்ள எல்லாருக்கும் தெரிந்த விஷயம். மாலாவிற்கு கோபம் பிடிக்காது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. அதனால் யாருக்கு என்ன பயன்? எனவே கோபத்தை அடக்கி கொள்வாள். அவளை மீறி கோபம் வந்தால், அதை வெளிக்காட்டும் சமயங்களை விட, அதனால் அவள் அழும் சமயங்களே அதிகம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படி எல்லாம் இருந்தாலும் கூட மாலாவிற்கு அவளுடைய அப்பாவை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் மாலாவிற்கு மிகவும் பிடிக்காத ஒரு குணம், அப்பாவின் முன்கோபம். விசாரிக்காமல் கோபப்படுவார். தொட்டதுக்கு எல்லாம் கோபப்படுவார். மாற்ற முடியும் விஷயத்திற்கும் கோபம் வரும். மாற்ற முடியாத விஷயங்களுக்கும் கோபம் வரும்.  இப்படி எதற்க்கெடுத்தாலும் கோபம் ... கோபம்... கோபம் என்று, அப்பா கோபப்படும் விஷயங்களை வரையறுத்துக் கூற முடியாது.

அதே போல் மாலாவிடம் குடியிருக்கும்  முற்போக்கு சிந்தனையை ஒரு காலமும் அவளுடைய தந்தை ரசித்தது கிடையாது. மாலாவுக்கும் அவள் தந்தையைப் போலவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் உண்டு. ஆனால், இருவரும் வாசிக்கும் கருத்துக்கள் தான் ஒற்றுமையாக இருக்காது. சிறு வயதில் மாலாவும் அவளுடைய குடும்பமும், சிறு வாடகை வீட்டில் தங்கி இருந்த போது, அவளுடைய அப்பா அவளுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் விதைத்தார். மாலா வளர வளர அவள் தங்கி இருந்த வீடு ஒரு சொந்த வீடாக மாறியது. அதே போல் அவளுடைய எண்ணங்களும் வளர்ந்தன. சிறு வயதில் சின்ன சின்ன கதைகளைப் படித்து வந்த மாலா, கல்லூரியில் சேர்ந்த பிறகு, நிறைய மனிதர்களிடம் பழக பழக, வாசிக்கும் புத்தகங்களும் பெரிய சாதனையாளர்கள் பற்றியதாக மாறியது. அவளுடைய வாசிப்பில் அவள் காந்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பாரதியார் போன்ற மாமனிதர்களை மனக்கண் முன் கண்டாள். இந்த பழக்கங்களால் மனதில் சிற்சில முற்போக்கு சிந்தனைகள் மனதில் தலை தூக்கும். உடனே அவளுடைய நெருங்கிய நண்பரான அப்பாவிடம் மனம் திறப்பாள். மனம் திறப்பதால் அப்பாவிற்கு கோபம் மூக்குக்கு மேல் வரும். ஆனால் பாவம் மாலா, அவளால் எவ்வளவு முயற்ச்சித்தும் அவளுடைய எண்ணங்களை மாற்ற முடியவில்லை. ஏன் மக்கள் அனைவரும் மற்றவர்களுக்காக வாழுகிறார்கள்? ஏன் இறைவன் ஜாதி மதம் என்று உருவாக்கினான்? மடிந்தால் மக்கிப் போகும் உடம்புக்காக ஒவ்வொருவரும் எப்படி வேதனைப்படுகிறார்கள்? இவ்வாறெல்லாம் எண்ணங்கள் தோன்றி அவளை சிந்திக்க வைக்கும்.

அன்று மாலாவிற்கு சாப்பிடும் தட்டைப் பார்த்து அழுகை அழுகையாய் வந்து கொண்டிருந்த்து. மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள். நெஞ்சை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு சொல்ல முடியாத சோகம் இருப்பது போல் மாலா உணர்ந்தாள். முந்தைய நாள் எப்போதும் போல அப்பா தேவையில்லாமல் கத்த ஆரம்பித்ததால், எப்போதும் போல இவர் ஏன் வீட்டிற்கு வந்தார் என்று தோன்றியது. ஆனால், எப்போதும் போல இல்லாமல் மாலா அன்று மனதில் தோன்றியதை வெளியில் சொல்லிவிட்டாள்.

“ஏன் இவர் வீட்டுக்கு வர்ராரோ? என்று எரிச்சலாக சொன்னது அவள் அப்பா காதுகளுக்கு எட்ட, “என்ன . . . என்ன சொன்னா இவ? என்று அப்பா இன்னும் உச்ச கட்ட கோபத்தில் அம்மாவிடம் கேட்க “எனக்கு தெரியாதுங்க என்று அம்மா சொன்னதும், “ஏன் வர்றேன்னா கேக்கறா இவ? இனி இந்த மூதேவிக்கும் எனக்கும் பேச்சு வார்த்தைக் கிடையாது என்றார் அப்பா.

இதைக் கேட்டதும் எவ்வளவோ முறை இந்த வசனத்தை மாலா கேட்டிருந்தாலும், அவள் கண்களில் கண்ணீர் துளிகள் கன்னத்தில் உருண்டோடின. அவர் பேசி விடுவார் என்று தெரிந்தாலும், அப்பாவின் கோபம் அவளை அழ வைத்த்து.

மாலா தட்டைப் பார்த்து அழுது பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று மீண்டும் இவ்வாறு அழுவாள் என்று அவள் நினைக்கவில்லை. இந்த பழக்கமும் மாலாவிற்கு அவளுடைய அருமை தந்தையின் கோபத்தினால் தான் உருவானது.

மாலா பசி தாங்க மாட்டாள். ஒரு நாள், மாலா அவளுடைய பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த போது அடக்க முடியாத பசி வந்துவிட்ட்து. சரியென்று தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டு முதல் வாய் அள்ளி சாப்பிடும் சமயத்தில், “இன்று சோமவாரம்.... இன்று போய் மாமிசம் சாப்பிடுறியே .... அறிவு கெட்ட மூதி... என்று கடுமையாக அப்பா திட்டிக் கொண்டே அடுப்பாங்கறைக்குள் நுழைந்தார்.

அது வரை என்ன சாப்பாடு என்ன நாள் என்று ஆராயாத மாலா, தட்டை அப்படியே கீழே ஞங்கென்று போட்டுவிட்டு கதறி அழுதாள். அப்பா திட்டியாதாலோ அல்லது பசியாலோ, மாலாவின் கோபத்தையும் அழுகையையும் அவளாள் அடக்க முடியவில்லை. அதற்கு அடுத்த நாளே, திரும்பவும் ஏதோ பிரச்சனை வந்ததால், அதிலிருந்து மாலாவால் இரவு சாப்பாட்டை சாப்பிட முடியாமல் அழுகை அழுகையாய் வரும். ஆனால் கல்லூரியில் நண்பர்களுடன் சேர்ந்து சிரித்து பழகினால், இந்த பழக்கம் மறைந்துவிடும். வீட்டிற்கு வந்தால், அதுவும் அப்பா அவர் கோவத்தை இவளிடம் காட்டினால், மனநோயும் உடல் நோயும் சேர்ந்தது போல அழுகையும் பசியும் சேர்ந்து வரும்.

பல சமயங்களில் அப்பா மேல் கோவம் வந்தாலும், மாலா கோவத்தை அடக்கிக் கொள்வாள். ஒரு சில சமயங்களில் வாய்விட்டு அழுதாலும், பல சமயங்களில் நெஞ்சுக்குள் புழுங்கி புழுங்கி செத்து விடலாமோ என்று மாலாவுக்கு தோன்றும். ஆனால் என்ன செய்தாலும் சாவு வரும் போது தான் வரும். அந்த நொடி பிறக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதற்கு முன்னால் சாக நினைத்தாலும் முடியாது; பின்னால் வாழ நினத்தாலும் முடியாது.

சில பேரை நாம் தலை கீழாக நின்றாலும் மாற்ற முடியாது. இதில் மாலாவின் அப்பாவும் அடக்கம். அப்பாவின் கோபத்தால் அவர் என்னென்ன இழக்கிறாரென்று மாலாவிற்கு தெரியும். மாலாவின் உறவினர் அவளுடைய அப்பாவிடம் அதிகம் பேசாததற்கு அவருடைய கோபமே முழுமுதற் காரணம். அப்படியே சிலர் பேசினாலும் மரியாதை நிமித்தமாகவே ஓரிரு வார்த்தைகள் பேசுவார்கள். இதை விட மாலாவுடைய பாட்டி தாத்தாவே அவர்களுடைய புதல்வனைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள். உள்ளுக்குள் பயம், உதட்டில் அசடு வழியும் சிரிப்புடன் அப்பாவிடம் உறவினர்கள் பேசினாலும், பின்னால் சென்று அவரை கிண்டலடிப்பதை மாலா கேட்டும் கண்டும் பல நாள் வருந்தியிருக்கிறாள். மாலாவின் மனத்தில் ஓடும் இந்த எண்ணங்கள் மாலாவுடைய அப்பாவிற்கு தெரியாது; அவருக்கு மட்டுமல்ல யாருக்குமே தெரியாது. அன்பாக பேசினாலும் அப்பாவின் குணத்தை மாற்ற முடியாது. கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும். ஆனால், பிறரை புண்படுத்தும் ஒரு குணம் இருந்தால் கூட அது நம்மையே பாதிக்கும். மாலாவால் அவள் அப்பாவை மாற்ற முடியாது என்றாலும், அவரிடம் படபடவென்று பேசாமல் கோபப்படாமல், கோபத்திலிருந்து தப்பிக்க முடியும்.

இவ்வளவு எண்ணங்களையும் மனத்தில் அசைப்போட்டுக் கொண்டே சாப்பாட்டை பிசைந்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய அம்மா எதிரில் உட்கார்ந்து மடமடவென்று சாப்பாட்டைக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு முடித்திருந்தாள். உலகிலேயே மேன்மையான உணர்ச்சி தாய்மை. அம்மா மாலாவுடைய தட்டைக் கவனித்து “சாப்பிடுடி... என்று சொன்ன போது அம்மாவின் குரல் நடுக்கத்தைக் கேட்டு மாலாவின் கண்களில் நீர் அதிகமாகியது. மாலாவின் தாய் அழவில்லை என்றாலும் அழுவதற்கு அடையாளமாக அவள் குரல் தொனித்தது. மாலாவால் சாப்பிட முடியவில்லை. கண்கள் எரிச்சலூட்டின. சாப்பிடும் சாப்பாட்டின் ருசியையும் அவளால், அவள் நாவால் புத்திக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தாள்.

அழுது அழுது கண்கள் சிவந்ததே தவிர அப்பா வீட்டிற்கு வரவில்லை. சிறு பிள்ளை அழுவது போல தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து, சாப்பிட்ட உணவை அவ்வாறு வாந்தி எடுத்தாள். அம்மா அவள் தலையைப் பிடித்துக் கொண்டாள். மாலாவை அவளுடைய அறைக்கு அழைத்து போகும் போது அவள் மயங்கி விழுந்தாள்.

அதற்கு பிறகு கண்கள் இருண்டன. மாலாவின் மனது மட்டும் அம்மா யாருக்கோ தொலைபேசியில் அழைக்கிறாள் என்பதை உணர்த்தியது. மனதும் யோசிப்பதைச் சிறுது நேரத்தில் நிறுத்தியது.

மாலா கண்ணைத் திறந்த சமயத்தில் அவளை சுற்றி ஒரு மருத்துவரும் அவளுடைய பெற்றோர்களும் நின்று கொண்டு இருந்தார்கள். உடல் இன்னும் சிறிது தொய்வாக இருப்பதை மாலா உணர்ந்தாள். மனதில் உள்ள பாரம் குறையவில்லை என்பதை அவளுடைய முகம் உணர்த்தியது. மருத்துவர், “ஷீ இஸ் ஆல் ரைட். ஆனா... என்று இழுத்தார். அவளுடைய பெற்றோர் முகத்தில் கேள்விக்குறி தெரிந்தது. மருத்துவர், “உடம்புக்கு மருந்து குடுத்துறலாம் ஆனா மனசுக்கு? என்று தொடங்கியவர், “நீங்க தான் பாத்துக்கனும் என்று தொடர்ந்து சொன்னதை உன்னிப்பாக கவனித்தார்கள் மாலாவுடைய பெற்றோர். மாலாவை ஹாஸ்ப்பிடலில் இருந்து வீட்டுக்கு இரவு நேரத்தில் அழைத்து வந்தனர். ஆனால் அப்பாவுக்கு வேலையிருந்ததால், அவரைக் காணோம்.     

மாலா சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்க போகும் நேரத்தில், யாரோ காலிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. அம்மா கதவைத் திறந்ததும் “ஏன் இந்த சைக்கிளை எடுத்து உள்ளே வைக்க முடியாதா?? எல்லாம் என் தலையெழுத்து. ஒன்றாவது இந்த வீட்டில் உருப்படியா இருக்கா? என்று அப்பாவின் சத்தம் மாலாவின் செவிகளில் விழ, அப்பாவுடைய கோபத்தைப் பார்க்க விரும்பாத மாலா கண்களை இருக மூடிக் கொண்டாள். அப்பா, பொண்ணு தூங்கிட்டாளா? என்று கேட்டுக் கொண்டே மாலாவின் அறைக்குள் நுழைந்தார்.

 மாலா தூங்கியிருக்கிறாள் என்று எண்ணி அப்பா அவளுடைய தலையை பாசமாக தடவி விட்டு சென்றார். மாலாவுக்கு உடம்பின் அசதியால் கண்கள் சொக்கியது. அப்பா தன் தலையைத் தடவியது கனவா நிஜமாயென்று யோசித்துக் கொண்டே மாலாவின் மனதும் தூங்க ஆரம்பித்தது.

No comments:

Post a Comment